காரைக்குடி:காரைக்குடியில் இருந்து 450 ஆண்டுகளுக்கும் மேலாக நகரத்தார் காவடிகள் ஆண்டுதோறும் தைப்பூச விழாவுக்கு பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் ஆன்மிக பயணம் தொடர்கிறது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு, காவடிகளை சுமந்து நடைபயணமாகவே செல்வது, கடந்த 450 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. இதன்படி காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோனாபட்டு, காண்டனூர் உட்பட 96 ஊர்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட நகரத்தார் காவடிகள் பழநிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்த அனைத்து நகராத்தார் காவடிகளும் குன்றக்குடியை அடைந்த பிறகு அங்கிருந்து ஒன்றாக கிளம்பிச் செல்லும். அதுபோலவே, திரும்பவும் காவடிகள் குன்றக்குடியை வந்தடைந்து, அங்கிருந்தே காரைக்குடிக்கு மக்கள் பிரிந்து செல்வர். காரைக்குடியை சேர்ந்த அரண்மனை பொங்கல் குடும்பத்தார் மற்றும் சாமியாடி தலைமையில் காவடிகள், பக்தர்களோடு புறப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. இதுகுறித்து அரண்மனை பொங்கல் இல்லத்தைச் சேர்ந்த அழகப்பன் கூறும்போது, ‘‘வரும் 31ம் தேதியன்று அனைத்து காவடி பக்தர்களும் காரைக்குடியை சுற்றி நகர் வலம் செல்வோம்.
இக்காலத்தில் நகரம் முழுக்க ஆன்மிகம் மணக்கும். தொடர்ந்து, பிப்ரவரி முதல் தேதியன்று நகரத்தார் காவடிகள் பழநிக்கு கிளம்பும். தைப்பூசத்தின் முதல் நாள் பழநியை சென்றடைவோம். பூசத்தின் மறுதினமும் தங்கி பழநி முருகனுக்கு காவடிகளை செலுத்திவிட்டு மீண்டும் நடைபயணமாகவே வருவது தனிச்சிறப்பாகும். வரும்போது குன்றக்குடி வரை அனைத்து காவடிகளும் வந்து சேர்ந்தவுடன், மஹேஸ்வர பூஜைக்கு பிறகு அவரவர் தங்கள் சொந்த ஊர் திரும்புவோம். இது 450 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் ஒரு பண்பாட்டு ஆன்மிக அடையாளமாக இருக்கிறது’’ என்றார்.
40 நாட்கள் விரதமிருந்து...
ஆண்கள் மட்டுமே காவடி சுமந்து செல்கின்றனர். பழநி சென்று திரும்பும் வரை வாகனங்களை பயன்படுத்துவதில்லை. நடந்தபடியே காவடிகளை சுமக்கின்றனர். 40 நாட்கள் விரதமிருந்தே காவடியைச் சுமப்பர். மயில்தோகை வைத்து அலங்கரித்து, அழகு வடிவில் காவடிகள் காட்சியளிக்கின்றன. செல்லும் ஊர்களில் எல்லாம் இவர்களுக்கு போட்டி போட்டு பொதுமக்கள் வரவேற்பு அளிப்பதும் சிறப்பாகும்.