திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே இரண்டு தலை 3 கண்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டியை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து சென்றனர். திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோபி(45). விவசாயி. இவர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான பசு ஒன்று நேற்று அதிகாலை ஆண் கன்று ஈன்றது. அதனை கோபி பார்த்தபோது அந்த கன்றுக்குட்டிக்கு இரண்டு தலை மற்றும் மூன்று கண்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது.
இதையடுத்து இந்த அதிசய கன்று குட்டியை பசலிகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் வந்து பார்த்து சென்றனர். மேலும் இந்த கன்றுக்குட்டிக்கு மூன்று கண், இரண்டு தலை உள்ளதால் இது கடவுளின் அவதாரம் என்று சிலர் அந்த கன்றுக்குட்டிக்கு பூஜைகளும் செய்தனர். இதனால் திருப்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த கன்றுகுட்டி நல்ல நிலையில் உயிருடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.