×

தென்பெண்ணை தடுப்பணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கருத்தில் கொண்டு ராசி மணலில் அணை கட்டும் திட்டத்தை விரைந்து முன்னெடுக்க வேண்டும்: வேலூர் உட்பட 9 மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு

வேலூர்: ஒரு மாநிலத்தில் இருந்து உற்பத்தியாகி ஓடி வரும் நதியின் குறுக்கே அந்நதியின் கீழ்படுகையில் உள்ள மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அணைகள் கட்டக்கூடாது. இதை கர்நாடகம் அப்பட்டமாக மீறி, கண்ணம்பாடி தவிர்த்து கபினி, ஹாரங்கி, ஹேமாவதி  என காவிரியின் குறுக்ேக 6க்கும் மேற்பட்ட அணைகளை கட்டி காவிரியின் நீரை தடுத்து நிறுத்தியுள்ளது.தற்போது மேகேத்தாட்டு அணைக்கட்டும் முயற்சியில் கர்நாடகம் இறங்கியிருப்பது தமிழகத்தில் சுமார் 18 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பு பாலைவனமாகும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 25 மாவட்டங்களின் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகும். நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு செல்லும். தமிழகத்தின் மொத்த உணவு உற்பத்தியில் 40 சதவீதம் முற்றிலும் முடக்கப்படும்.

தென்பெண்ணை தடுப்பணை விவகாரத்தில் வலுவான வாதம் வைக்கப்படாததால் பின்னடைவை சந்தித்த தமிழகம் மேகேத்தாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் முனைப்புக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதுடன், கர்நாடகத்தின் ஒப்புதலுடன் காவிரியின் இடது கரையில் கீழ்நோக்கி 42 கி.மீ தொலைவில், தமிழக கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் இருந்து மேல்நோக்கி 18 கி.மீ தொலைவில் ராசி மணலில் உபரியாக வரும் காவிரி நீரை முழுமையாக பயன்படுத்தும் வகையில் அணைக்கட்ட வேண்டும். ராசி மணல் தமிழகத்துக்கு சொந்தமான கிருஷ்ணகிரி மாவட்ட வன எல்லைப்பகுதி. இங்கு அணைக்கட்ட ஏதுவாக பள்ளத்தாக்கும், ஏறத்தாழ 400 அடி உயரத்துக்கு இருபுறமும் குன்றுகளும் இயற்கையாக அமைந்துள்ளன. அடர்ந்த வனப்பகுதி என்பதால் இந்த அணைக்கட்டப்படுவதால் குடியிருப்புகள், விளைநிலங்கள் மூழ்கும் அபாயமும் இல்லை. அதோடு கிருஷ்ணகிரி மாவட்ட  அஞ்செட்டி வனப்பகுதியில் பெரிய பள்ளத்தாக்கும், அங்கு பெய்யும் மழைநீரை கொண்டு வரும் தொட்டியாலா கானாறும் காவிரியுடன் ராசி மணலில் இணைகிறது.

மேட்டூர் அணை கட்டப்பட்டு கடந்த 80 ஆண்டுகளில் பல முறை நிரம்பி உபரி நீர் கடலில் சென்று கலந்துவிடுகிறது. இதனை காரணம் காட்டியே கர்நாடகம் மேகேத்தாட்டுவில் அணையை கட்ட முயற்சிக்கிறது.  ஏற்கனவே தமிழகத்தில் பல அணைகளை கட்டி நீர் மேலாண்மையில் தனித்தடம் பதித்த காமராஜர், ராசி மணல் அணை திட்டத்தை முன்னெடுத்து 1961ல் அதற்காக அடிக்கல்லும் நாட்டியுள்ளார். அடிக்கட் நாட்டப்பட்ட திட்டம் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படாத நிலையில், எம்ஜிஆர் ஆட்சியின் போது திட்டத்தை நிறைவேற்ற தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வந்த திமுக ஆட்சியின்போது ராசி மணல் அணைக்கட்ட மத்திய அரசை வலியுறுத்தி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன காரணத்தாலோ இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரியில் வெள்ளம் வரும் சமயங்களில் 75 டிஎம்சி நீரை தேக்க முடியும். உபரிநீர் கடலில் சேருவதை முழுமையாக தடுக்க முடியும். இதனால் கர்நாடகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதுடன் அவர்களது அனுமதியும் தேவைப்படாது. ஒத்துழைப்பு மட்டுமே போதும். கடந்த ஜூன் 12ம் தேதி ராசி மணல் திட்டத்தை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு ராசி மணலில் பெயர் பலகையும் வைக்கப்பட்டது. மேலும் ராசி மணல் அணைக்கட்டுவதற்காக பூம்புகார், வேதாரண்யம், ரங்கம் ஆகிய இடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான செங்கற்கள் ராசி மணலில் குவிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து விவசாய சங்க நிர்வாகிகள் டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சக அதிகாரிகளிடம் ராசி மணல் அணைக்கட்ட கோரிக்கை மனுவையும் வழங்கியதுடன், ஜூலை 22ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் உண்ணாவிரதம், முற்றுகை போராட்டங்களையும் நடத்தினர். எனவே, இவ்விஷயத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து ராசி மணல் அணைக்கட்டும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் கோரிக்கை.

அதேநேரத்தில் ராசி மணலில் கட்டும் அணையால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி வடமாவட்டங்களும் பயன்பெறும். ராசி மணல் அணை கட்டும் இடம் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ளது. இங்கு காவிரியுடன் தொட்டியாலா கானாறு சேரும் இடம் 150 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அணை கட்டப்படும்போது தொட்டியாலா பள்ளத்தாக்கு கானாற்–்றில் 20 கி.மீ தூரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கும் வாய்ப்பு அமையும். அங்கிருந்த இந்த நீரை 25 கி.மீ தூரத்துக்கு கால்வாய் மூலம் கொண்டு வந்து ஒசூருக்கு கிழக்கே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கெலமங்களம் அணையில் சேர்க்க முடியும். அங்கிருந்து கிருஷ்ணகிரி அணைக்கு வரும் தண்ணீர் அங்கிருந்து நெடுங்கல் தடுப்பணை வழியாக சாத்தனூருக்கும், தென்பெண்ணை பாலாறு இணைப்புக்கால்வாய் மூலம் பாலாற்றுக்கும் திருப்பிவிட முடியும்.

இதனால் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களும் பயன்பெறும். மேலும் காவிரி-தென்பெண்ணை-பாலாறு இணைப்புத்திட்டத்தை காவிரியின் உபரிநீர் வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தவும் முடியும். ராசி மணலில் அணைக்கட்டப்பட்டால் காவிரியில் உபரிநீர் வரும் காலங்களில் 50 முதல் 75 டிஎம்சி வரை தேக்கி வைக்கப்பட்டு அதில் இருந்து 30 டிஎம்சி நீரை பாலாற்றுக்கும், தென்பெண்ணைக்கும் திருப்பிவிட முடியும்.  உரிய ஆதாரங்களுடன், தகுந்த வாதங்களை வைத்து மத்திய நீர்வள ஆணையம் மூலம் அனுமதி பெற்று ராசி மணல் அணை திட்டத்தை வேகமாக செய்து முடிக்கப்பட வேண்டும். எனவே, தமிழகத்தின் 9 மாவட்டங்களை வளப்படுத்த ராசி மணல் அணை திட்டத்தை நிறைவேற்றி  மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் கோரிக்கை.

ராசி மணல் காமராஜரின் கனவுத்திட்டம்
பாலாறு பாதுகாப்பு இயக்க நிர்வாகியும், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகியுமான பாலாறு வெங்கடேசன் கூறியதாவது: ராசி மணல் அணைக்கட்டும் திட்டம் காமராஜரின் கனவுத்திட்டம் மட்டுமல்ல அத்திட்டம் அவரால் அடிக்கல் நாட்டப்பட்டு எம்ஜிஆர், கருணாநிதி ஆகிய இரண்டு முதல்வர்களால் பரிசீலிக்கப்பட்ட திட்டம். ஆகவே, தென்பெண்ணை தடுப்பணை விவகாரத்தில் மூக்குடைப்பட்டதை போல, மேகேத்தாட்டு அணை விவகாரத்திலும் கர்நாடகத்துக்கு சாதகமான சூழல் செல்லாமல் தடுப்பதுடன், ராசி மணல் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுடன் பேச வேண்டும். தற்போதைய மாநில அரசு மத்திய அரசுடன் இணக்கமான சூழலுடன் இருப்பதை வாய்ப்பாக பயன்படுத்தி ராசி மணல் அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இதன் மூலம் பாலாறு-தென்பெண்ணை-காவிரி இணைப்பும் சாத்தியமாகும். தமிழகத்தின் 9 மாவட்டங்கள் பயன்பெறும். நமக்கு கோதாவரி-காவிரி இணைப்பு என்று மத்திய அரசு ஜாலவித்தை காட்டுகிறது. அந்த திட்டம் ஒருபுறம் இருந்தாலும் காவிரி உரிமை விஷயத்தில் நாம் மேலும் ஏமாற முடியாது என்பதை மத்திய அரசுக்கும், கர்நாடகத்துக்கும் வலுவாக தெரியப்படுத்த வேண்டும்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மூலம் கேள்விக்குறியான பாலாறு-தென்பெண்ணை இணைப்புத்திட்டம்
உள்நாட்டு நதிகள் இணைப்பு திட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டம் வறண்டு கிடக்கும் பாலாற்றின் நிலத்தடி நீராதாரத்தை மீட்டெடுப்பதை நோக்கமாக கொண்டது. அதன்படி, தென்பெண்ணையில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை சீசனில் வீணாகி கடலில் கலக்கும் 6.5 டிஎம்சி நீரில் 3.5 டிஎம்சி நீரை பாலாற்றுக்கும், 3 டிஎம்சி நீரை செய்யாற்றுக்கும் திருப்பிவிட வேண்டும் என்பது திட்டத்தின் நோக்கம். இதற்காக 2000ம் ஆண்டு ₹250 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டும், திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், அதன் திட்ட மதிப்பீடு ₹650 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அக்டோபரில் வேலூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கண்டிப்பாக பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டம் 650 கோடியில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால், இதுவரை வெறும் பேச்சாகவே உள்ளது.

இதற்கிடையில் கர்நாடகத்தின் கோலார், பெங்களூரு புறநகர் மாவட்ட குடிநீர் தேவைக்காக தென்பெண்ணையின் நீராதாரமாக விளங்கும், அதன் துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே 10 டிஎம்சி தண்ணீைர தேக்கி வைக்கும் வகையில் 50 மீட்டர் உயர தடுப்பணை கட்டும் பணியில் கர்நாடகம் இறங்கியது. இதுதொடர்பான வழக்கு நடந்து வந்தபோதே கர்நாடகம் 90 சதவீத அணை கட்டுமானத்தை முடித்துவிட்டது. இதுபற்றி தெரிந்தும் தமிழக அரசு அதை கண்டுகொள்ளவில்லை. மேலும் தென்பெண்ணையின் துணை நதியான மார்கண்டேய நதியும் தமிழக பகுதியில்தான் தென்பெண்ணையுடன் இணைகிறது. ஆகவே அதுவும் பன்மாநில நதிதான் என்பதை வலுவாக தனது வாதத்தில் தமிழக அரசு எடுத்து வைக்கவில்லை என்றே விவசாய சங்கங்கள் வேதனை தெரிவிக்கின்றன.


Tags : Supreme Court ,Dyke ,Vellore district , Coconut Oil, Supreme Court, Rasi Manali, Farmers
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...