ஓரிடத்தில் இல்லாமல் சுற்றித் திரிந்துகொண்டே இருப்பதால் இவர்கள் ‘நாடோடிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 7.5 சதவீதம் பேர் நாடோடி இனத்தவர்கள். தமிழகத்தில் 5 லட்சம் நாடோடி மக்கள் வசிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. திருவிழாக்கள், சந்தைகள் என்று மக்கள் கூடும் இடங்களே இவர்களது வயிற்றுப்பசி போக்க வருமானம் தரும் களங்கள். ஊர் ஊராகச் செல்லும் இவர்கள் பஸ் நிலையம், ரயில் நிலையம் என்று காலியாகக் கிடக்கும் இடங்களில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.இந்தியாவில் 862 நாடோடி இனத்தவர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் 162 நாடோடி இன மக்கள் எந்த பட்டியலிலும் இடம்பெறாமல் உள்ளனர். அடையாளம் இல்லாத இவர்களை ஆதரிப்பார் யாரும் இல்லை. சாதிச்சான்றுகள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, குடியுரிமைச் சான்று, இருப்பிடச் சான்று என்று அரசின் எந்தச் சான்றும் இவர்களிடம் இல்லை. குறிப்பாக நாடோடி மக்களின் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி உரிமை கூட கிடைப்பதில்லை.
இதனால் அவர்களின் வாழ்க்கை பயணம் தடம் மாறிக் கொண்டிருப்பதற்கான அவலங்களையும் நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. பெரும்பாலான நாடோடிகள் தங்கள் குழந்தைகளை தங்களுடனேயே அழைத்துச் செல்கிறார்கள். அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இருப்பதில்லை. தற்போது இது போன்ற மக்களை ஒன்றிணைத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்காக, சில அமைப்புகள் போராடத் துவங்கியுள்ளது. நாடோடி மக்களின் மேம்பாட்டுக்காக அரசு தனி நலத்துறையை உருவாக்கி, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்தால் அவர்களும், அரிய சாதனையாளர்களாக ஜொலிப்பார்கள் என்பது நாடோடி மக்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களின் ஆதங்கம். நாடோடிகள், சுதந்திரப் பறவைகள். அளவான உடைமைகள் உடையோர். உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் ஆதி மனிதன் செய்த பயணம் இன்னும் இவர்களுக்குள் முடியவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. பயணம் மட்டுமே இவர்களுக்கு வாழ்க்கை.
தேசங்களின் எல்லைகளை தகர்த்த தெய்வங்கள். எந்த பள்ளிகூடங்களும் கற்றுத் தராத ‘எளிமையான வாழ்க்கை முறை’ ஒன்றை உலகத்தாரின் செவிப்பறைகளில் அறைந்து போதிக்கின்ற கூடாரக் கோவில்களில் வாழ்க்கை நடத்துபவர்கள். உலகில் மிக உன்னதமான வாழ்வைப் பெற்ற மனிதர் கூட்டம் இந்த நாடோடிக்கூட்டம்தான். வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் இவர்களை வாழ்விக்க, மனிதநேயத்துடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது சமூக சிந்தனையாளர்களின் ஒட்டுமொத்த எண்ணமாக உள்ளது.