×

ஏர் இந்தியா நிறுவனத்தில் ஊழல் சிதம்பரத்திடம் 6 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

புதுடெல்லி : ஏர் இந்தியா விமான நிறுவன முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை நேற்று 6 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு, ஏர்செல் மேக்சிஸ் போன்ற வழக்குகளை சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இவற்றில் இவருடைய மகன் கார்த்தி சிதம்பரமும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் சிதம்பரத்தை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தன. 105 நாட்கள் சிறையில் இருந்த அவர், கடந்த மாதம்தான் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். தற்போது, அவர் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், பொருளாதார கொள்கை போன்றவற்றை கடுமையாக எதிர்த்து போராட்டங்கள் நடத்தியும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார். இந்நிலையில், சிதம்பரத்துக்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது ஏர் இந்தியா நிறுவனத்தில் நடந்த முறைகேடு, ஊழலில் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் லாபகரமான சர்வதேச வழித்தடங்கள், விமானங்களை இயக்கும் நேரம் ஆகியவை, ஐமு கூட்டணி ஆட்சியின்போது தனியார் விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அவர் ஆதாயம் அடைந்ததாகவும், ஏர் இந்தியா நிறுவனத்துக்கும் பல ஆயிரம் கோடி இழைப்பை ஏற்படுத்தியதாகவும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, முன்னாள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேலிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில், இடைத்தரகராக செயல்பட்ட தீபக் தல்வார், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து கைது செய்யப்பட்டு, இந்தியா அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். மேலும், இவரது நிறுவனத்துக்கு கத்தார் ஏர்வேஸ், எமிரேட்ஸ், ஏர் அரேபியா போன்ற விமான நிறுவனங்களிடம் இருந்து ரூ.429 கோடி லஞ்சம் பெறப்பட்டு, விமான போக்குவரத்து துறை மற்றும் ஏர் இந்தியா அதிகாரிகள் பலருக்கு பகிர்ந்து கையூட்டாக கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதில், குறிப்பாக இந்த  பணத்தில்தான் தீபக் தல்வாரின் உதவியாளர் யாஷ்மின் கபூர் டெல்லியில் வீடு வாங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கிய முன் ஜாமீனை டெல்லி நீதிமன்றம் ரத்து செய்ததால் யாஷ்மின் கபூரை அமலாக்கத்துறை கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் கைது செய்து  6 நாள் காவலில் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், இந்த ஊழல் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி  ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத் துறை கடந்தாண்டு ஆகஸ்டில் சம்மன் அனுப்பியது. அப்போது, அவர் திகார் சிறையில் இருந்தார். சமீபத்தில் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நேற்று காலை 11 மணியளவில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜரானார். அப்போது, ஏர் இந்தியா நிறுவத்திற்கு கடந்த 2006ம் ஆண்டில் 110 விமானங்கள் ரூ.70 ஆயிரம் கோடியில் வாங்க முடிவு எடுக்கப்பட்டது தொடர்பாகவும், அதில் ஊழல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றியும், அதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது பற்றியும் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. இந்த விசாரணை 6 மணி நேரம் நடந்தது. அதன் பிறகு,  அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சிதம்பரம், அங்கு கூடியிருந்த நிருபர்களை சந்திக்காமல் சென்றார்.

சிதம்பரத்திடம் விசாரணை ஏன்?


ஏர் இந்தியாவுக்கு 110 விமானங்கள் வாங்குவது பற்றி முடிவு எடுக்கப்பட்ட போது, அதற்கான உயர் அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுவுக்கு சிதம்பரம்தான் தலைவராக இருந்தார். அதனால்தான் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : corruption scandal ,Enforcement department ,department ,Air India Enforcement , Enforcement department ,investigates corruption scandal,Air India
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...