சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய போது, பிரதமர் மோடி, அமித்ஷா, முதல்வர் படங்களை செருப்பால் அடித்தும், தீவைத்து கொளுத்தியதாக, தமுமுக பிரமுகர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கடந்த டிசம்பர் 18ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடந்தது. அப்போது. சிலர் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவப்படங்களை செருப்பால் அடித்தும், தீவைத்தும் கொளுத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையடுத்து பட்டினப்பாக்கம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், போராட்டத்தின்போது பிரதமர் மோடி, அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருவப்படங்களை செருப்பால் அடித்த மாமல்லபுரத்தை சேர்ந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை ேசர்ந்த நிர்வாகி பீர்கான முகமது (40) என்பவரை போலீசார் வீடியோ பதிவு உதவியுடன் நேற்று கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.