×

சென்னை மாநகராட்சியின் முதன்மை தலைமை பொறியாளர் பதவி நீக்கம்:ஆணையர் பிரகாஷ் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியின் முதன்மை தலைமை பொறியாளர் பதவியை நீக்கியும், தலைமை பொறியாளர்களின் பொறுப்புகளை மாற்றியமைத்தும், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் உள்ள பொறியாளர் பிரிவுகளை கண்காணிக்க, ஒரு முதன்மை தலைமை பொறியாளர் மற்றும் 5 தலைமை பொறியாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், முதன்மை தலைமை பொறியாளராக இருந்த புகழேந்தி, நகராட்சி நிர்வாக ஆணையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நகராட்சி நிர்வாக ஆணைய தலைமை பொறியாளர் நடராஜன் சென்னை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து முதன்மை தலைமை பொறியாளர் பதவியை நீக்கியும், தலைமை பொறியாளர்களுக்கான துறைகளை மாற்றம் செய்தும், ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மழைநீர் வடிகால், பேருந்து சாலைகள், சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட துறைகளின் தலைமை பொறியாளர் நந்தகுமார், பொதுப்பிரிவில் தலைமை பொறியாளராக நியமிக்கப்படுகிறார். அவர், மழைநீர் வடிகால், பேருந்து சாலை, சிறப்பு திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி பயிற்சி அனைத்து மண்டலங்களின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட துறைகளை கவணிப்பார். பூங்கா துறையில், தலைமை பொறியாளர் காளிமுத்து பூங்கா விளையாட்டு மைதானம், நகரமைப்பு துறைகளை கவனிப்பார்.  தலைமை பொறியாளர் நடராஜன், தரக்கட்டுப்பாடுத் துறையை கவனிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே இருந்து வந்த பொதுப்பிரிவு தலைமை பொறியாளர் பதவி, முதன்மை தலைமை பொறியாளர் பதவியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த பதவியில் 4 ஆண்டுகளுக்கு மேல், புகழேந்தி பணியாற்றி வந்தார். அவர், நகராட்சி நிர்வாக ஆணையத்துக்கு இடமற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பதவி நீக்கப்பட்டு, மீண்டும் பழைய நிலையில் இருந்தபடி பொதுப்பிரிவு தலைமை பொறியாளர் பதவியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

வருவாய் அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்
சென்னை  மாநகராட்சி ஆலந்தூர் 12வது மண்டலத்தில் உதவி வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்தவர் பாலசுப்பிரமணியன். இவர், லஞ்சம் பெற்றுக்கொண்டு கட்டிடங்கள், ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரியை குறைத்து பெறுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி விளக்கம் கேட்டுள்ளனர். விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்பு துறையினர் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக ஆலந்தூர் மண்டல உதவி வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து  சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Prakash ,Principal Chief Engineer ,Chennai Corporation ,Chief Engineer , Madras Corporation, Chief Chief Engineer, Commissioner Prakash
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...