துபாய்: 120 மொழிகளில் பாடும் துபாயில் வசிக்கும் 13 வயது இந்திய சிறுமி, குழந்தை மேதை விருதை பெற்றுள்ளார். துபாயில் உள்ள இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சிறுமி சுஜிதா சதீஷ் (13). இவர் 120 மொழிகளில் பாட்டு பாடியுள்ளார். இவருக்கு ‘100 குளோபல் குழந்தை மேதை விருது’ கிடைத்துள்ளது. நடனம், இசை, கலை, எழுத்து, நடிப்பு, மாடலிங், அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை டாக்டர் அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் உட்பட பலர் இணைந்து வழங்குகின்றனர்.
இந்த விருது கிடைத்தது பற்றி சுஜிதா கூறுகையில், ‘‘ஒரே கச்சேரியில் பல மொழிகளில் பாடியும், துபாயில் உள்ள இந்திய தூதரக ஆடிட்டோரியத்தில் நீண்ட நேரம் நடந்த கச்சேரியில் நான் 12 வயதில் 102 மொழி பாடல்களை 6.15 மணி நேரத்துக்கு மேலாக பாடியும் இரு உலக சாதனைகளை படைத்துள்ளேன். அதற்காக நான் ‘100 குளோபல் குழந்தை மேதை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டேன்,’’ என்றார்.