கும்பகோணம் : கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலில் முக்கோடி தெப்ப திருவிழாவையொட்டி நேற்றிரவு கல்கருட உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலில் முக்கோடி தெப்ப திருவிழா கொடியேற்றம் கடந்த 30ம் தேதி நடந்தது. இதையடுத்த தினமும் காலை, மாலை நேரங்களில் பெருமாள், தாயார் புறப்பாடு நடந்தது. விழாவின் சிறப்பம்சமாக நேற்று இரவு உலக பிரசித்தி பெற்ற கல்கருட சேவை திருவிழா நடந்தது. அப்போது கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் இருந்தது. இதையடுத்து சன்னதியில் இருந்து முதலில் 4 பேர், அடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கல் கருடபகவானை தோளில் வீதியுலா புறப்பாடாக தூக்கி சென்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.