சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை உடனடியாக வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேலும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிக்கு தற்போது மொத்தம் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் அனைத்தும் நேற்று வெளியானது. இந்த நிலையில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஒரு கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,”தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அனைத்திற்கும் சேர்த்து தான் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
ஆனால் மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சிக்கு மட்டும் தேர்தலை அறிவித்து நடத்தி விட்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தவில்லை. அதனால் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை உடனடியாக அறிவித்து, அதன் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். இது குறித்து மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்களும் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையம் மேல்முறையீடு
சிசிடிவி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,” தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் ஒரு சில இடங்களில் நாளை (இன்று) காலை வரையில் கூட நடைபெறும் என தெரியவந்துள்ளது. இதுபோன்ற சூழலில் எப்படி வீடியோ பதிவை நீதிமன்றத்தில் குறிப்பிட்ட அவகாசத்திற்குள் தாக்கல் செய்ய முடியும். அதனால் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.