திருவனந்தபுரம்: கேரளாவில் வடகிழக்கு பருவமழை 27 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கி, செப்டம்பர் இறுதிவரை பெய்யும். வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 31ம் தேதி வரை பெய்வது வழக்கம். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்துள்ளது. அதேபோல், வடகிழக்கு பருவமழையும் அதிகமாக பெய்துள்ளது. இந்தாண்டு கேரளாவில் வடகிழக்கு பருவமழை 27 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
வழக்கமாக, அக்டோபர் முதல் டிசம்பர் வரை 3 மாதங்களில் சராசரியாக 491.60 மி.மீ மழை பெய்யும். ஆனால், இந்தாண்டு 625 மி.மீ மழை பெய்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி மாவட்டங்களில் மட்டும் வடகிழக்கு பருவமழை சராசரியை விட குறைவாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் சராசரியை விட மிக அதிகமாக 83 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. வழக்கமாக இங்கு 344 மி.மீ மழை பெய்யும். இந்தாண்டு 622 மி.மீ மழை பெய்துள்ளது.