ஆலந்தூர்: மடிப்பாக்கம் - மேடவாக்கம் சாலையில், மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்ற மினி லாரி, தடுப்பு சுவர் மீது ஏறி நின்றது. ருவான்மியூரில் இருந்து மடிப்பாக்கம் நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று நேற்று கீழ்க்கட்டளைக்கு சென்று கொண்டிருந்தது. மடிப்பாக்கம் - மேடவாக்கம் சாலையில் கணேஷ் நகர் அருகே வந்தபோது, முன்னாள் சென்ற மாநகர பேருந்தை லாரி முந்திச்செல்ல முயன்றது.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் 4 அடி உயர தடுப்பு சுவரின் மீது ஏறி அந்தரத்தில் நின்றது. இதில், லாரியின் டிரைவர் ரமேசுக்கு தலையிலும், கிளீனர் முருனுக்கு தோள் பட்டையிலும், பலத்த காயம் ஏற்பட்டது. இந்த திடீர் விபத்தால், மடிப்பாக்கம் - மேடவாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மடிப்பாக்கம் போலீஸ் எஸ்ஐ அசோகன், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்து விரைந்து வந்து கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தினை சரி செய்தனர். இதனால், அப்பகுதியில் சுமார், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.