×

எதிர்ப்பை மீறி தொடங்கப்பட்ட கல்குவாரியால் கிராமத்தை விட்டு வெளியேற மக்கள் முடிவு: முதல்வர், ஜனாதிபதிக்கு புகார் மனு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம்  உத்திரமேரூர் அருகே கிராம மக்கள் எதிர்ப்பை மீறி துவங்கப்பட்டுள்ள கல்குவாரியால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் கிராம மக்கள் கல்குவாரிக்கு தடைவிதிக்க கோரி முதல்வர், ஜனாதிபதிக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். இல்லாவிட்டால், கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூர் அடுத்த பழவேறி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல்வேறு தனியார் கல்குவாரிகள் இயங்குகின்றன. இந்த கல்குவாரிகள் அருகே கல்அரவை தொழிச்சாலைகளும் செயல்படுகின்றன. குவாரிகளில் பூமியில் இருந்து கற்கள் பெயர்த்தெடுக்க தினமும் சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் பயன்படுகின்றன. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிர்வு ஏற்பட்டு, கிராமங்களில் உள்ள வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்படுகிறது.இதுமட்டுமின்றி கல்குவாரி லாரிகளால் கிராம சாலைகள் பழுதாகின்றன. இதனால்  போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இந்த சாலையில் கிராம செல்லும்போது, பழுதான சாலையில் விபத்து ஏற்பட்டு உயிர் சேதமும் ஏற்படுகிறது. அதேபோல், கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகளால் கிராம மக்களுக்கு சுவாசக் கோளாறு, கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதுடன் விவசாயிகள் பயிரிடும் பயிர்களில் புகை படிந்து பயிர்கள் வளராமல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

இந்த கல்குவாரிகளில் சுமார் 500 அடிக்கும் மேல் ஆழம் தோண்டுவதால் கிராம புறங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து குடிநீர் பற்றாக்குறை தொடர் கதையாகிவிட்டது. இதுபோல் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இயற்கை வளங்கள் அழிகிறது.இந்நிலையில், கடந்த 2 மாதத்துக்கு முன், உத்திரமேரூர் அடுத்த பழவேறி கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் புதிதாக கல்குவாரி தொடங்கப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்,  உண்ணாவிரதம், கிராம சபை புறக்கணிப்பு என பல்வேறு போராட்டங்கள் நடத்தி மாவட்ட கலெக்டரிடம்  புதிய குவாரிக்கு தடைவிதிக்க என கோரிக்கை விடுத்தனர்.ஆனால், கல்குவாரி இயங்குவதற்கு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மண் எடுக்கும் பணி தீவிரமாக நடந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் உத்திரமேரூர் தாசில்தார் கோட்டீஸ்வரன், செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தையும் அங்கு வந்த வட்டாட்சியரின் காலில் வீசி சென்றனர். ஆனால் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிககையும் எடுக்கவில்லை. இந்நிலையில் புதிய கல்குவாரிக்கு தடைவிதிக்கக் கோரி ஆளுநர், ஜனாதிபதி, முதல்வர் என பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளனர். மேலும் கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்பால் கிராம மக்கள் அனைவரும் ஊரைவிட்டே காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


Tags : village ,Kalkwari ,President ,CM ,Defendant , People's decision,leave Kalkwari village ,defiance of opposition, CM, petition , President
× RELATED கல் குவாரி திட்ட கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு