சென்னை: வாலிபரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை சூளை கண்ணப்பர் திடல் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (22). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் சூளை பகுதி சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள், ஆனந்தை வழிமறித்து, அவரது செல்போனை பறித்தனர். அதிர்ச்சியடைந்த ஆனந்த், திருடன்.. திருடன்.. என கூச்சலிட்டார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து, அந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து, பெரியமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வியாசர்பாடி கன்னிகாபுரம் முதல் சந்தை சேர்ந்த சந்துரு மற்றும் ஆகாஷ் என்பது தெரிந்தது. இதில், சந்துரு தியாகராயர் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. ஆகாஷ் லோடு மேனாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.