தைபே: தைவானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், ராணுவ தளபதி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். தைவானில் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று காலை புறப்பட்டு சென்றது. இந்த மாத இறுதியில் லூனார் புத்தாண்டு பிறப்பதையொட்டி வழக்கமாக வீரர்களை சந்திக்கும் நிகழ்வாக ராணுவ அதிகாரிகள் யெலன் நகருக்கு புறப்பட்டு சென்றனர். இந்த ஹெலிகாப்டரில் ராணுவ தளபதி ஜெனரல் ஷென் யி மிங், 3 மேஜர் ஜெனரல் உட்பட 14 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், தைபே மலைப்பகுதிக்கு அருகே சென்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த ராணுவ மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கிருந்து படுகாயத்துடன் போராடிக் கொண்டிருந்த 6 பேர் மீட்கப்பட்டனர். எனினும், இந்த விபத்தில் ராணுவ தளபதி ஜெனரல் ஷென் யிமிங், 3 மேஜர் ஜெனரல்கள் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் ராணுவ தளபதி உயிரிழந்துள்ளதை அடுத்து, 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அதிபர் டிசாய் இங் வென் தெரிவித்துள்ளார்.