×

கருங்கல் அருகே காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு தண்டவாளத்தில் செல்போன் பேசியவாறு நடந்த வாலிபர் ரயில் மோதி பலி

கருங்கல்: குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கப்பியறை வயக்கரை பகுதியை சேர்ந்தவர் எட்வின் ராவ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பிரவின் ராவ் (21). 10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், தனது தந்தையுடன் இணைந்து வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்கான பாஸ்போர்ட் மற்றும் விசா தயார் நிலையில் இருந்தது. சமீபத்தில், விடுமுறையில் வெளிநாட்டில் இருந்து வந்த எட்வின் ராவ், இந்த முறை மீண்டும் வெளிநாடு செல்லும் போது, மகன் பிரவின் ராவையும் அழைத்து செல்ல இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம், பிரவின் ராவ் காதில் ஹெட் செட் மாட்டிக் கொண்டு நண்பர்களுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இவர்கள் வீட்டு அருகே ரயில்வே தண்டவாளம் உள்ளது. தண்டவாளத்தில் நடந்தபடி பேசிக் கொண்டு இருந்த பிரவின் ராவ், அந்த வழியாக தண்டவாளத்தில் வந்த ரயிலை கவனிக்க வில்லை. ஹெட்செட் மாட்டிக் கொண்டு இருந்ததால், ரயில் வரும் சத்தமும் கேட்க வில்லை. வேகமாக வந்த ரயில், பிரவின் ராவ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரவின் ராவ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் ராஜூ தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி, பிரவின் ராவ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டு எதிரிலேயே வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் ரயில் விபத்துக்களில் உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. தண்டவாளம் மற்றும் தண்டவாளங்கள் அருகில் செல்போன் பேசியவாறு நடந்து செல்லக்கூடாது என்பன போன்ற விழிப்புணர்வுகள் இருந்தாலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

Tags : Karungal Train , Train collides
× RELATED மாணவர்கள், நோயாளிகள் நலன் கருதி ரயில்...