அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை புகழ்ந்து அந்த மாநில துணை முதலமைச்சர் புஷ்பா ஸ்ரீவாணி வெளியிட்டுள்ள டிக் டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் துணை முதல்வராக பொறுப்பேற்றவர் புஷ்பா ஸ்ரீவாணி (33). இவர் பழங்குடியினர் நலவாழ்வு துறை அமைச்சராகவும், துணை முதல்வராக தற்போது உள்ளார்.
கடந்த வருடம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று பதவியேற்றபோது அவரை புகழும்படியாக “ ராயலசீமா முத்துப்பிட்ட மன ஜெகன் அண்ணா” என்ற தெலுங்கு பாடல் ஒன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை புகழ்ந்து, புஷ்பா ஸ்ரீவாணி டிக் டாக்கில் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அதே வேளையில் துணை முதல்வராக இருப்பவர் இவ்வாறு டிக் டாக் வீடியோ பதிவு செய்யலாமா என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.