×

கடற்கரை, கோவில் குளங்களில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? : உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: கடற்கரை, கோவில் குளங்களில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து உயிரிழப்புகளை தடுக்க குழு அமைக்க கோரிய வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

உயர்நீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பது என்பது தொடர் நிகழ்வுகளாக இருப்பதாகவும், வார இறுதி நாட்கள்,  விடுமுறை, கோடை விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறை நாட்களில் நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் ஆழம் தெரியாத நீர் நிலைகள், பயன்பாடு முடிவடைந்த கல்குவாரிகள் போன்றவற்றை வேடிக்கை பார்க்கச் செல்வதாலும், குளிக்கச் செல்லும் போது ஆழம் தெரியாத பகுதிகளில் செல்பி  எடுக்கச் செல்வதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி  கடந்த 2014 -ஆம் ஆண்டில் மட்டும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 884 ஆக உள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 90 விழுக்காட்டினர் 12 வயதிற்குட்பட்டவர்கள் என்பது மிகவும் அதிர்ச்சியானதாக இருப்பதாகவும், இதேபோல் கடல் சீற்றம் மற்றும் கடலில் மூழ்கி இறப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் சுற்றுலா தலங்கள்,  கோவில் குளங்கள், அருவிகள், கடல் பகுதிகளில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் நீச்சலில் நிபுணத்துவ வாய்ந்தவர்கள் கொண்ட குழுவை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும்.சுனாமி தடுப்புச் சுவர் மற்றும் கண்கானிப்பு கோபுரங்களை கடற்கரை பகுதிகளில் அமைக்க வேண்டும் என கோட்டீஸ்வரி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தமிழகத்தில் உள்ள அருவிகள், ஆறுகள், உள்ளிட்ட நீர்நிலைகள், சுற்றுலா தளங்களில் உயிரிழப்புகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.இதற்கு மனுதாரர் தரப்பில்  பொங்கல் பண்டிகை   விடுமுறை வருவதால், ஆறு,குளம்,கடற்கரை க்கு செல்வார்கள். எனவே நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க அதற்கு முன்பாகவே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு எடுக்கும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு குறித்து பிப்ரவரி  3ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு  இறுதி கெடு விதித்து  விசாரணையை தள்ளிவைத்தனர்...

Tags : deaths ,beach ,High Court , Beach, Temple Pools, High Court, Order, Report, Filing
× RELATED சீனாவில் உலக பாராபீச் வாலிபால்...