ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்கனவே புகாருக்குள்ளான அரசு மருத்துவமனையில் மேலும் 9 குழந்தைகள் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 100-ஆக அதிகரித்துள்ளது. கோடா என்ற இடத்தில் செயல்பட்டுவரும் ஜேகே லான் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறை, சுத்தமான பராமரிப்பு இல்லாமல் நோய்த்தொற்று காரணமாக பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து மாநில காங்கிரஸ் அரசை எதிர் கட்சிகள் கடுமையாக விமர்ச்சித்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் 9 குழந்தைகள் பலியானத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் உண்மை நிலவரத்தை கண்டறிய ஜெய்ப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கோடா மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கியுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் 100 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. செவ்வாய்கிழமை பாஜக எம்பி-க்கள் குழு அந்த மருத்துவமைக்கு சென்று ஆய்வு செய்து உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போதிய செவிலியர்கள் இல்லாதது குறித்து மிகவும் அதிருப்தி தெரிவித்திருந்தது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையமும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.