×

மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட விருந்து நிகழ்ச்சியில் மாற்றம்: ஜன.20--ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஜனவரி 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு நடக்கும்  பொதுத்தேர்வின் போது மாணவர்கள் பதற்றமாக காணப்படுவது வழக்கம். அதனால், அவர்கள் தேர்வை சரியாக எழுத முடியாமல் போகிறது. மாணவர்கள் இடையே உள்ள அச்சத்தை போக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பள்ளி  மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு நடக்க இருப்பதை அடுத்து, பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனைத்து மாநில  கல்வித்துறைக்கும் ஏற்கனவே கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், மீண்டும் அந்த துறை கடிதம் அனுப்பி மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதனால் பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிகையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வை நம்பிக்கையுடனும், பயமின்றியும் எழுதும் வகையில் ‘‘பரீட்சா பே சர்ச்சா 2020’’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர்  நரேந்திரமோடி பள்ளி மாணவர்களுடன் ஜனவரி 16ம் தேதி டெல்லியில் உள்ள தல்காதோரா ஸ்டேடியத்தில் உரையாற்றுகிறார். இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதன் பேரில் பள்ளி மாணவர்கள்  இணைய தள வழியாக கட்டுரைகள் அனுப்பி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் உரையாற்ற உள்ள நிகழ்ச்சியை தூர்தர்ஷன், வானொலி மூலம் நேரடியாக ஒலி ஒளி பரப்ப உள்ளனர். இந்த நிகழ்ச்சி தகவல் தொழில்நுட்ப துறை நேரலை தளங்களான மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை  Youtube channel of MHRD Mygov.in, Face Book Live and Swayamprapa Channels of MHRD மூலமும் பிரதமர் அலுவலக இணைய தளம் ஆகியவற்றில் பார்க்கலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து,  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். பழுதாகியுள்ள தொலைக்காட்சி பெட்டிகளையும் பழுது நீக்கி வைக்க வேண்டும். மேலும் 9ம் வகுப்பு  முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ, மாணவியர் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் வைக்க வேண்டும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கையில் கூறியுள்ளது.

இந்த நிகழ்ச்சி நிரல்படி, தமிழகத்தில் ஜனவரி 16ம் தேதி பொங்கல் பண்டிகை. அதற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும். அப்படி இருக்க மாணவர்கள் எப்படி பள்ளிக்கு வர முடியும் என்று பெற்றோர்  கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இதைப்போல மகர சங்கராந்தி, லோரி உள்ளிட்ட பண்டிகைகளால் வேறு பல மாநிலங்களிலும் 16-ந் தேதி பள்ளிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்களை பங்கேற்க வைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகிற 20-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  மாணவர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை 16-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிக ஆர்வமும், உற்சாகமும் காணப்பட்டது. தனித்துவமான இந்த  நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு மட்டுமின்றி, மன அழுத்தம் இன்றி தேர்வுகளை எழுதி வெற்றிகளை பெறுவதற்கு பிரதமர் வழங்கும் குறிப்புகளை பெறுவதற்கும் அவர்கள் ஆர்வமாக இருந்தனர்.

ஆனால் பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக 16-ந் தேதி இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாணவர்கள், ஆசிரியர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி  20-ந் தேதி (திங்கட்கிழமை) நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags : Modi ,banquet ,Attendees , PM Modi to attend PM Modi's banquet with students
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...