டெல்லி: இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி இன்று கர்நாடகா வருகிறார். துமகூரு சித்தகங்கா மடத்துக்கு செல்லும் அவர் மறைந்த ஸ்ரீசிவகுமார சுவாமிகளின் அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அங்கு நடக்கும் விவசாய மாநாட்டிலும் அவர் பங்கேற்க இருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இரண்டு நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். துமகூரு சித்தகங்கா மடத்துக்கு வருகை தரும் மோடி மடாதிபதியை சந்தித்து பேசுகிறார்.
இந்நிலையில் சித்தங்கா மடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமிகளின் மறைவு நம்மை விட்டு அகலும் முன்பு பெஜாவர் மடாதிபதி விஸ்வேஷ தீர்த்த சுவாமிகளும் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.சித்தங்கா மடாதிபதி மறைவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அவரை தரிசனம் செய்வதற்கு வந்திருந்தார். ஆனால், இறுதி சடங்கில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட பயணமாக துமகூருவுக்கு இன்று (ஜன. 2.) வருகிறார். துமகூரு வருகிற பிரதமர் நரேந்திர மோடி சித்தகங்கா மடத்திலுள்ள சுவாமிகளின் சமாதியில் தியானம் மேற்கொள்கிறார்.
மேலும், சித்தகங்கா சுவாமிகளின் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து துமகூருவில் நடக்கும் ஜூனியர் கல்லூரி மைதானத்தில் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். பின்னர் பெங்களூரு செல்லும் அவர் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அலுவலகத்துக்கு சென்று பார்வையிடுகிறார். அன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். தொடர்ந்து, நாளை ஜன.3ம் தேதி பெங்களூரு வேளாண் பல்கலை கழகத்தில் 107வது இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கேற்கிறார். இதை முடித்துக்கொண்டு டெல்லி திரும்புகிறார் என்றார்.