சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வந்ததன்மூலம் பாஜக, காந்தியை இரண்டாவது முறையாக கொலை செய்துள்ளது என்று வைகோ கூறினார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: எமர்ஜென்சியைப் போன்ற ஒரு நடவடிக்கைதான் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா. பாஜ அடிப்படையான ஜன சங்கத்தின் ெகாள்கைகளை ஒவ்வொன்றாக புகுத்தி வருகின்றனர். நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதை திசை திருப்பவே காஷ்மீர், குடியுரிமை சட்டத்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு செய்தது.
மத்திய பாஜக அரசுக்கு தொடர்ந்து சேவகம் செய்த காரணத்தால் மட்டுமே தமிழகத்திற்கு நிர்வாகத்திறனில் முதலிடம் வழங்கியுள்ளார்கள். உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி எத்தனை தில்லுமுல்லு செய்து இருந்தாலும், திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். இந்த தேர்தல் அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும். இந்தாண்டு ஆட்சி மாற்றத்திற்கு நிச்சயம் வழிவகுக்கும். முத்தலாக், என்ஐஏ, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமைச் சட்டத்திருத்தம் உள்ளிட்டவற்றை அவசர அவசரமாக கொண்டு வந்தது இது பாசிச அரசு என்பதை காட்டுகிறது. குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வந்ததன் மூலம் காந்தியை இரண்டாவது முறை கொன்றுள்ளது பாஜ அரசு. நெல்லை கண்ணன் ஒரு நல்ல சொற்பொழிவாளர். அவர் அந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கக்கூடாது. அந்த வார்த்தை தவறானது. ஆனால், தவறான நோக்கத்தில் அவர் பேசவில்லை. எனவே அவரது பேச்சை பெரிதுபடுத்த வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.