சென்னை: இளம் வீரர்களுக்கான செஸ் பயிற்சி முகாமை உலக செஸ் சாம்பியன்கள் சென்னையில் நடத்த உள்ளனர். மைக்ரோசென்ஸ் நிறுவனம் சார்பில் சர்வதேச சதுரங்க போட்டிகளில் பங்கேற்கும் இளம் வீரர்களுக்கு சென்னையில் செஸ் பயிற்சி முகாம் நடக்க உள்ளது. இந்த முகாம் ஜன. 8ல் தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறும் . இதில் முன்னாள் உலக சாம்பியன்கள் விளாடிமிர் கிராம்னிக் (ரஷ்யா), போரிஸ் கெல்பாண்ட் (பெலாரஸ்) ஆகியோர் முக்கிய பயிற்சியாளர்களாக இருப்பார்கள்.
இந்த முகாமில் பங்கேற்க 14 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிராண்ட் மாஸ்டர்கள் பி.இனியன், பிரக்னானந்தா, குகேஷ், ரவுனக் சாத்வானி, பிருது குப்தா, அர்ஜுன் எரிகாசி, சர்வதேச மாஸ்டர்கள் அர்ஜுன் கல்யாண், பாரத் சுப்ரமணியம், லியோன் மென்டோங்கா, ஸ்ரீஷ்வன் மரலட்சிகரி, ஆதித்யா மிட்டல், ரஹில் முல்லிக், பெண் சர்வதேச மாஸ்டர்கள் ரக்ஷிதா ரவி, வைஷாலி ஆகியோர் பயிற்சி பெற உள்ளனர்.மைக்ரோசென்ஸ் நிறுவனம் இதுபோன்று முன்னாள் சாம்பியன்கள் மூலம் இளம் வீரர்கள், வீராங்கனைளுக்காக சதுரங்க பயிற்சி முகாமை நடத்துவது இது 2வது முறையாகும்.