×

சிகிச்சைக்கு வந்த மாணவனை ஊசி வாங்கிவரச் சொல்லி அலைகழிப்பு: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அவலம்

ஆம்பூர்: ஆம்பூர் வளையல்கார தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் இஸ்திரி கடை  நடத்தி வருகிறார். இவரது மகன் ராகுல்(11). அங்குள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் ராகுல் தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த வெறிநாய் ஒன்று ராகுலை விரட்டியடித்தபடி  கை, விரல்கள் மற்றும் முகத்தின் ஒரு பகுதியை கடித்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ராகுலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவமனையில் இருந்த சிலர் ராகுலிடம், ‘ஊசி வாங்கி வா’ என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே இருந்த கடைக்குச் சென்று ஊசி வாங்கிவந்து தந்துள்ளனர்.

அதன்பிறகே நாய்க்கடிக்கு ஊசி போட்டனர். அதன்பின்னர் நாய்கடித்ததால்  முகத்தில் தொங்கிய சதையை தைக்க ஊசி வேண்டும் மீண்டும் கேட்டுள்ளனர். பின்னர் அதனையும்  வெளியே சென்று கொக்கி ஊசி வாங்கிவந்து கொடுத்துள்ளனர். இதற்கு பின்னரே மாணவனுக்கு மருந்து தடவி தையல் போட்டனராம். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இதுபோன்று சிகிச்சை பெற வருபவர்களிடம் ஊசி இல்லை எனக்கூறி வெளியில் இருந்து வாங்கி வரச்சொல்லி போடும் அவல நிலை தொடர்வதாக பொதுமக்கள் சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ambur State Hospital Hospital Government Hospital , Government Hospital
× RELATED இரு சக்கர வாகனத்தில் சென்றபோது...