×

வேளாங்கண்ணியில் குண்டும் குழியுமான சாலைக்கு அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம்

நாகை: வேளாங்கண்ணியில் குண்டும், குழியுமாக மாறியுள்ள சாலைக்கு இறுதி அஞ்சலி செலுத்தி பொதுமக்கள் நுாதன போராட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச்சில் தொடங்கி வேளாங்கண்ணி பேராலயம் வரையிலான சாலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. சுமார் 2 கிலோ மீட்டர் துாரம் கொண்ட இந்த சாலையை வாகனங்களில் செல்வோர்கள் கடப்பதற்கும் போதும் போதும் என்றாகி விடுகிறது. மேலும் பாதாள சாக்கடை மேன்ஹேல் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் ஏற்கனவே குண்டும், குழியுமாக இருந்த சாலையில் மழை நீர் தேங்கி மேலும் சாலைகள் சேதமாகியுள்ளது. குண்டும், குழியுமான சாலையில் வாகனங்கள் மாட்டிக்கொண்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. வேளாங்கண்ணி பேரூராட்சியின் மெத்தனமான போக்கல் இந்த சாலை இப்படி ஆகிவிட்டது என்று சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தும் பயன் இல்லை.

இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒன்று கூடி குண்டும், குழியுமாக மாறிய சாலையில் வாழை மரங்கள் நட்டு வைத்து, ஊதுபத்தி, வாழைப்பழம், மாலை ஆகிவற்றை வைத்து சாலை இறந்துவிட்டதாக கூறி அஞ்சலி செலுத்தி நூதன முறையில் போராட்டத்தில் நடத்தினர்.

Tags : Velankanni ,pit road , Velankanni, bomb and pit road
× RELATED ஈஸ்டர் சண்டே விழாவில் பங்கேற்க...