×

தமிழகத்திலேயே முதன்முறையாக மணிமுத்தாறில் இன்று முதல் சோலார் படகு இயக்கம்

அம்பை: தமிழகத்திலேயே முதன்முறையாக மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகளை கவர இன்று முதல் சோலார் படகு இயக்கப்படுகிறது. இதையொட்டி மணிமுத்தாறு அணையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நெல்லை மாவட்ட சுற்றுலா தலங்களில் மணிமுத்தாறு அருவிக்கென சிறப்பிடம் உண்டு. மணிமுத்தாறு பகுதியை சூழலியல் சுற்றுலாதலமாக மாற்றிய வனத்துறை, அங்கு சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக 1.8 கோடி செலவில் புதிய சாலையை மாதக்கணக்கில் அமைத்து வருகிறது. இதன் விளைவாக மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வது தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக மனித உரிமைகள் ஆணையத்தின் கண்டனத்திற்கும் வனத்துறை உள்ளாகியது. இந்நிலையில் மணிமுத்தாறை மீண்டும் பழையபடி சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற வனத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இன்று புத்தாண்டு முதல் பயணிகள் மணிமுத்தாறின் அருவிச் சூழலை அனுபவிக்கும் வகையில் படகு பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மார்ச் மாதம் மும்பையில் இருந்து 50 லட்சம் செலவில் சூரிய ஒளியால் இயங்கும் சோலார் படகு வாங்கப்பட்டு, மணிமுத்தாறு வந்து சேர்ந்தது. அந்தப் படகை மணிமுத்தாறு செக் போஸ்டுக்கு எதிரே நிறுத்தியுள்ளனர். இப்படகில் ஒரே சமயத்தில் 25 பேர் பயணிக்க முடியும். மணிமுத்தாறு அணையில் தற்போது 115 அடி தண்ணீர் உள்ளது. எனவே சோலார் படகு பயணத்தை தொடங்கலாம் என வனத்துறையினர் முடிவு செய்து, இன்று (1ம் தேதி) புத்தாண்டு முதல் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். நேற்று வனவர் முருகேசன் தலைமையில் படகு பயணத்திற்கான சோதனை ஓட்டம் நடந்தது. தமிழகத்திலேயே முதன் முறையாக சோலார் படகு மணிமுத்தாறு அணையில் இயக்கப்பட உள்ளதால் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : First Solar Boat Operation ,Tamil Nadu , Solar boat movement , Tamil Nadu , first time
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...