எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வடக்கு முத்துலாபுரத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்களின் மகன் நகுலன் (6). 1ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால், அங்குள்ள கூட்டுறவு கடன் சங்கம் அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் அவனை காணவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசில் புகார் செய்தனர். அதேஊரைச் சேர்ந்த அருள்ராஜ் (28) என்பவர், சிறுவனை கடத்திச் சென்றிருக்கலாம் என போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, சிறுவன் நகுலனை அடித்துக் கொன்றதாக அருள்ராஜ் தெரிவித்தார். சிறுவன் சடலத்தை கண்டுபிடிக்காததால் உறவினர்கள் நேற்று காலை மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எம்.கோட்டூர் விலக்கில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஏடிஎஸ்பி குமார் சமரத்தை அடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டனர். இதையடுத்து சிறுவன் உடலை ஆம்புலன்சில் அங்கு கொண்டு வந்தனர். பின்னர் சிறுவனின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையின்போது அருள்ராஜ், சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாகவும், அவன் மறுத்ததால் தூக்கிச் சென்று அடித்துக் கொன்று ஊருக்கு கிழக்கு பக்கமுள்ள சோளக்காட்டில் போட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அருள்ராஜ் கைது செய்யப்பட்டார்.