மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் நள்ளிரவு 11 மணி வரை பூஜை நடக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க கோயில் என்பதால் பாதுகாப்பு கருதி ஐந்து கோபுர வாசல்களில் எஸ்ஐ உள்பட 4 போலீசார் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தெற்கு கோபுரம் அருகே கோயில் அலுவலகத்தில் இணை கமிஷனர் மற்றும் ஊழியர்களுக்கான அலுவலகம் இயங்கி வருகிறது. இந்தப் பகுதிகளில் கோயில் காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை இணை கமிஷனர் அலுவலகத்தில் இருந்த 2 கம்ப்யூட்டர்கள் மற்றும் எல்இடி டிவி மாயமானதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். புகாரின்பேரில் கோயில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.