நியூயார்க்: உலகில் முதலில் 2020ம் புத்தாண்டை பசிபிக் தீவில் உள்ள குட்டி நாடான டோங்கா மற்றும் சமோவா வரவேற்றது. உலகின் முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடு பசிபிக் தீவில் உள்ள குட்டி நாடுகள்தான். இதன்படி, பசிபிக் தீவுகளிலுள்ள குட்டி நாடுகளான டோங்கா, சமோவா மற்றும் கிரிபட்டி ஆகியவற்றில், இந்திய நேரப்படி நேற்று மாலை 3.45 மணி அளவில் முதலில் புத்தாண்டு பிறந்தது. இங்கு புத்தாண்டை வரவேற்கவும், மக்களை மகிழ்விக்கவும் வாணவேடிக்கைகள் நடந்தது. இதையடுத்து, மக்கள் கட்டித்தழுவி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். ஏராளமானவர்கள் சாலைகளில் திரண்டு புத்தாண்டை கொண்டாடினர்.
இதைத்தொடர்ந்து, நேற்று மாலை 4.30 மணி அளவில் நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. அங்கும் இதையொட்டி வாணவேடிக்கைகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்தன. நள்ளிரவு 12 மணி ஒலித்ததும் மக்கள் ஆரவாரத்துடன் துள்ளிக்குதித்தனர். ஆண், பெண் பாராமல் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். நியூஜிலாந்தைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது. ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் இரவு 9 மணி முதல் கண்கவர் வாணவேடிக்கை நடந்தது. ஓவல் அரங்கை சுற்றி திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வாணவேடிக்கையை கண்டுக்களித்தனர். புத்தாண்டு பிறந்ததும், மக்கள் தங்களுக்கிடையே புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.