காளையார்கோவில்: காளையார்கோவில் தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் நாய் மற்றும் கால்நடைகளால் பொதுமக்கள் அதிகளவில் விபத்துகளை சந்திக்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் வெறிநாய்களை பிடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காளையார்கோவிலில் உள்ள வீதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றது. இதனால் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்பவர்கள் பொருட்கள் வாங்குவதற்கு வாகனங்களில் செல்லுபவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களை துரத்தி வந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடிக்கின்றன. இதனால் மில் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் வேலைக்குச் செல்வதற்கு அச்சப்படுகிறார்கள்.
மாநில நெடுஞ்சாலையிலும் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் பெரும் விபத்துக்களைச் சந்திக்க நேரிடுகின்றது. கடந்த சில மாதங்களில் பொதுமக்களை அதிகளவில் நாய்கள் கடித்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர் சில நாய்கள் வெறிபிடித்து உடல் முழுவதும் புண்ணுடன் திரிவதால் பொதுமக்களுக்குத் தொற்று நோய் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. எனவே நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிலகாலம் தெருக்களில் பன்றிகளின் நடமாட்டம் குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் வலம் வரத்தொடங்கி விட்டதால் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றார்கள்.