குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மழையின் காரணமாக அனைத்து பகுதியும் பசுமையாக காணப்படுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு தேவையான உணவு எளிதில் கிடைத்து வருகிறது. இதனால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகேயும், சாலையோர தேயிலை தோட்டங்களில் உலா வருகின்றன.
இந்நிலையில் சமவெளி பகுதியில் இருந்து வந்த யானை கூட்டம் ஒன்று கடந்த மூன்று நாட்களாக இச்சிமரம், வடுகன் தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களும், அப்பகுதி மக்களும் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பாதிப்படைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் யானை கூட்டத்தை விரட்ட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.