திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம் அதீத மது பழக்கத்தால் ஏற்பட்ட ஒன்று என்று சிபிஐ அறிவித்துள்ளது. கடந்து 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில் தனது விசாரணை அறிக்கையில் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் நடிகர் கலா பவன் மணி ஒரு நாளைக்கு குறைந்தது 15 கேன் பீர் குடித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது கல்லீரல் மிகவும் கெட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. மதுவில் உள்ள மீத்தைல் என்ற ரசாயனத்தின் அளவு மணியின் மரணத்திற்கு காரணம் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீத்தைல் 6 மில்லி கிராம் வரை ரத்தத்தில் இருக்கலாம் என்றும் அது வெறும் 4 மில்லி கிராம் அளவுக்கு மட்டுமே மணியின் உடலில் இருந்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி கலாபவன் மணி நண்பர்களுடனான மது விருந்தின் போது, திடீரென உயிரிழந்தார். மதுவில் விஷம் கலந்து கொல்லப்பட்டதாக கலாபவன் மணியின் சகோதரர் வழக்கு தொடர்ந்தனர். இந்தியாவின் மிக பிரசித்தி பெற்ற மருத்துவர்கள் குழு, பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு சிபிஐ தற்போது வழக்கை முடித்து வைத்துள்ளது. ஆட்டோ ஓட்டுநராக தனது வாழ்க்கையை தொடங்கிய கலாபவன் மணி, கலாபவன் என்ற குழுவின் புகழ்பெற்று பின்னர் நடிகர் ஆனார். ஆனால் மதுப்பழக்கத்தால் உயிரிழந்தது தற்போது உறுதியாகி உள்ளது.