தஞ்சை : தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசுக்கு விருப்பமில்லை. உச்சநீதிமன்ற நிர்பந்தம் காரணமாக தேர்தல் நடக்கிறது. அதில் எவ்வளவு முறைகேடு செய்ய முடியுமோ அதை செய்து விட்டனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் எத்தகைய முறைகேடுகள் நடக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. தவறான முறையில் உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றுவதற்கான முயற்சியை ஆளுங்கட்சி மேற்கொள்கிறது. தேர்தல் ஆணையம் அதற்கு முழு உடந்தையாக இருக்கிறது. கோலம் போட்டு வாழ்த்தும் தெரிவிக்கலாம், எதிர்ப்பும் தெரிவிக்கலாம். அதற்கு உரிமை உள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோலம் போட்டனர் என்பதற்காக பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு பெண்கள் எல்லோரும் தங்களுடைய வீடுகளில் இந்த மாதிரியான கோலங்களை போட வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.