திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கியது. 41 நாட்கள் நடந்த மண்டல காலம் கடந்த 27ம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து அன்று இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. 28, 29, ஆகிய தேதிகளில் நடை சாத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை மீண்டும் திறக்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.
இன்று முதல் நெய்யபிஷேகம், உஷபூஜை உள்பட பூஜைகள் ெதாடங்கும். ஜனவரி 15ம் தேதி சிறப்பு பெற்ற மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு தரிசனம் நடைபெறும். ஜனவரி 19ம் தேதியுடன் மண்டல, மகர விளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடையும். 20ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 21ம் தேதி காலை 6.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.கோயில் நடைதிறக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர். நேற்று பிற்பகல் 2 மணிக்கு பின்னரே பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.