×

வாக்குச்சாவடி மாற்றியதால் ஓட்டுப்போட மக்கள் மறுப்பு: மீஞ்சூர் அருகே பரபரப்பு

பொன்னேரி: மீஞ்சூர் அருகே வாக்குச்சாவடியை மாற்றியதால் வாக்களிக்க மக்கள் மறுத்துவிட்டனர். அதிகாரிகள் சமாதானப்படுத்தியதையடுத்து வாக்களித்தனர். மீஞ்சூர் ஒன்றியம், நாலூர் ஊராட்சியில் நாலூர் மற்றும் நாலூர் கம்மவார்பாளையம் பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் அப்பகுதி மக்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில், நாலூர் கம்மவார்பாளையம் பகுதியில் உள்ள வாக்காளர்கள் அக்கரம்பேடு வாக்குப்பதிவு மையத்துக்கு மாற்றப்பட்டனர். இதனால் மக்கள் சுமார் 5 கிமீ தூரம் நடந்து செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதையடுத்து, இன்று காலை அப்பகுதி மக்கள் ‘’அக்கரம்பேடு வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று வாக்களிக்க மாட்டோம்’ என்று கூறி வாக்குப்பதிவை புறக்கணித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து அறிந்ததும் பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமாதானப்படுத்தினர். இதுபோல் இனிமேல் நடக்காது என்று அதிகாரிகள் எழுத்துபூர்வமாக உறுதியளித்தனர். இதன்பிறகு மக்கள் அக்கரம்பேடு வாக்குப்பதிவு மையத்துக்கு சென்றுவர அரசு வேன் ஏற்பாடு செய்து வாக்களிக்க ஏற்பாடு செய்தனர்.

Tags : Meenkoor Polling ,Parabharam , Polling
× RELATED சாப்பாடு சரியில்லை என்ற தகராறில்...