டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, ட்விட்டரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்பினரும், எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பல பகுதிகளில் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. உத்தரபிரதேசத்தில் லக்னோ, அலிகார் பகுதிகளில் நடந்து வந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது. இதில் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேரணியில் ஈடுபட்டு வருகிறார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தில் கோலம் போட்டு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாகவும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேரணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பாஜக மற்றும் RSS உள்ளிட்ட இந்து அமைப்புகளும் CAA ஆதரவாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, ட்விட்டரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். #IndiaSupportsCAA என்ற ஹேஷ்டேக் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தம் என்பது, ஒடுக்கப்பட்ட அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பானது என்றும், யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கானது அல்ல என்றும் தமது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நமோ இணையத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கிராபிக்ஸ், வீடியோக்கள் மற்றும் பலவற்றிறை பார்த்துவிட்டு CAA க்கான உங்கள் ஆதரவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த ஹேஷ்டேக்கில் பதிவிட்டு, பகிர்ந்து, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு அளிக்குமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே, பிரதமர் மோடி உருவாக்கிய #IndiaSupportsCAA ஹேஷ்டேக் உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது.