×

காலாப்பட்டு சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு கூலிங் கிளாஸ், ஷூ அணிந்து வலம் வந்த பிரபல ரவுடி: புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி:  சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜராக கூலிங் கிளாஸ், ஷூ அணிந்து  கூட்டாளிகளுடன் ஒய்யாரமாக நடந்து வந்தது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சோழன். இவர் மீது காலாப்பட்டு சந்திரசேகர் கொலை, முத்தியால்பேட்டை ரவுடி அன்பு ரஜினி கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட ரவுடி சோழன் தற்போது காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, கொலை வழக்கு ஒன்றில், விசாரணைக்காக சிறையில் இருந்து சோழனை புதுச்சேரி நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர். சோழன், கூலிங் கிளாஸ் கண்ணாடி மற்றும் ஷூ அணிந்து  கூட்டாளிகளுடன் ஸ்டைலாக நடந்து வந்துள்ளார்.

மேலும் அவர், ஆதரவாளர்களை பார்த்து கும்பிட்டவாறும், கை அசைத்தவாறும் நடந்து சென்றுள்ளார். இதனை அவரது ஆதரவாளர் ஒருவர், ஒரு வீடியோ எடுத்து ரஜினி நடித்துள்ள `தர்பார்’ படத்தின் பாடலை ஒப்பிட்டு டிக்டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங் களில் வைரலாக பரவி வருகிறது. இது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறைக்குள் நடத்திய அதிரடி சோதனையில் 11 செல்போன்களை கைதிகளின் அறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் போலீசார் மீதான பயமே ரவுடிகளுக்கு இல்லாததே இது போன்ற வீடியோக்கள் மற்றும் நடத்தைகளுக்கு காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


Tags : celebrity ,Puducherry ,jail ,court , Kalapattu Prison, Famous Rowdy, Puducherry
× RELATED பிரபல தாதா மருத்துவமனையில் அட்மிட்...