சென்னை: இந்தியாவில் 2030-ம் ஆண்டுக்குள் 100% எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களால் இந்தியா ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. காற்று மாசுபாடு, கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை அதிகரிப்பு என பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் இந்தியாவிற்கு உண்டாகும் பிரச்னைகளை சொல்லி கொண்டே போகலாம்.
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மத்திய அரசு மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு அளித்து வருகிறது. இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஹூண்டாய் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. மேலும், பல்வேறு கார் நிறுவனங்கள் தங்கள் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் மையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை இந்தியா மட்டுமல்லாமல் உலகமே சந்தித்துவரும் பிரச்னைகள் என்றார். இதனால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், புதியதாக உருவாக்கப்பட்ட லித்தியம் அயர்ன் பேட்டரி வாகனத்தை அறிமுகம் செய்துவைத்தார். மேலும், இந்தியாவில், 2030-ம் ஆண்டிற்குள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் 100 சதவீத எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.