சென்னை: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வாங்கப்பட்ட சொத்து விவரம் குறித்து தனது அண்ணன் மகன் விவேக் ஜெயராமனுக்கு சசிகலா கடிதம் எழுதியதை வருமான வரித்துறை அம்பலப்படுத்தியுள்ளது. பண மதிப்பிழப்பு காலக்கட்டத்தில் சசிகலா வாங்கியதாக கூறப்படும் 1,674 கோடி சொத்துகளின் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தாக்கல் செய்துள்ளது. அதில் ஆவணங்கள், சாட்சிகள் அல்லாமல் கடிதம் ஒன்று முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது. 2017 நவம்பரில் விவேக் ஜெயராமன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது சசிகலா எழுதிய கடிதம் கிடைத்தது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த விவேக், வீட்டு பாதுகாவலரிடம் ஒருவர் கடித்தை கொடுத்து சென்றதாக கூறினார்.
காவலர் யார், கொடுத்தது யார் என்பது பற்றி ஞாபகம் இல்லை என்று விவேக் தெரிவித்துவிட்டார். ஆனால் சசிகலா சட்ட ஆலோசகர் செந்திலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடிதத்தில் இருப்பது சசிகலா கையெழுத்து என்பது உறுதியாகியுள்ளது. விசாரணையில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா கடிதம் எழுதியது உறுதியாகியிருக்கிறது. பரோலில் சசிகலா வந்தபோது சொத்துகள் தொடர்பாக விவேக் ஜெயராமனிடம் ஆலோசனை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலத்தில் வாங்கப்பட்ட சொத்துகள் தொடர்பாக சசிகலாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக சசிகலா வாங்கிய சொத்துகள் பற்றி தினம் ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.