அனைத்து தரப்பினரையும் முடக்கிப்போட்டுள்ள ஜிஎஸ்டி குளறுபடிக்கு முடிவே இல்லையா?: தீர்வில்லாமல் தவிக்கின்றனர் சிறு, குறு வியாபாரிகள்
மாநிலங்களில் ஒவ்வொரு பொருட்களுக்கும் வரிகள் போடப்பட்டதை மாற்றி, மத்திய, மாநில வரிகளை சேர்த்து சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) முறையை பாஜ அரசு அமல்படுத்தியது. கடந்த 2017ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நான்கு அடுக்குகளாக 5 முதல் 18 சதவீதம் வரை வரிகள் போடப்பட்டன. பல முறை மாநிலங்களுடன் பேசியபின், வரிகள் மாற்றி அமைக்கப்பட்டன. எந்த ஒரு சிறு, குறு வியாபாரிகள் கூட ஜிஎஸ்டியில் இருந்து தப்ப முடியாது; அதுபோல பெரிய நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரியை கட்டி அறிக்கையை தாக்கல் செய்தாக வேண்டும். ஆனால், ஒரு தரப்பினர் ஒழுங்காக வரியை கட்டி வருகின்றனர்.இன்னொரு தரப்பினர், மக்களிடம் வாங்கும் வரியை கட்டாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வந்தனர். மக்களுக்கோ வழக்கம் ேபால தலைவலி தான்.
சாதாரண 5 ரூபாய் பிஸ்கெட் வாங்கினாலும் சரி, வார இறுதியில் ஓட்டலுக்கு போனாலும் சரி ஜிஎஸ்டி வரியை பில்லில் பார்த்தால் தலை சுற்றி விடும். எந்த ஒரு பொருளை வாங்கினாலும், ஜிஎஸ்டி வரியால் பலருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏறியிருக்கும். அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்களும், சிறு, குறு வியாபாரிகளும் தான். இதோ இதுவரை ஜிஎஸ்டி வரி வருவாய் மத்திய அரசுக்கு போதுமான அளவில் கிடைக்கவில்லை. மாநிலங்களுக்கும் பங்கு வரி வருவாயை அளிக்க முடியவில்லை. பெரிய நிறுவனங்கள் கட்டிய அட்வான்ஸ் ஜிஎஸ்டி வரி தொகையும் திரும்ப கிடைக்காத நிலை காணப்படுகிறது. மாநிலங்களுக்கு ஏதோ ஓரளவு ஜிஎஸ்டி வரி வருவாய் பங்குத் தொகையை அளித்தாலும் இன்னமும் 69 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது மத்திய அரசு. இப்படி சிறு, குறு வியாபாரிகளையும், பெரிய நிறுவனங்களையும், பொது மக்களையும் முடக்கிப்போட்டுள்ள ஜிஎஸ்டி வரி குளறுபடிகளுக்கு முடிவு தான் எப்போது என்ற கேள்வி பலரின் மனதிலும் புரியாத குழப்பமாக தொடர்கிறது. இதோ நான்கு கோணங்களில் ஒரு அலசல்