காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் பஜார் வீதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு காவேரிப்பாக்கம், கட்டளை, சேரிஅய்யம்பேட்டை, உப்பரந்தாங்கல், பொன்னப்பந்தாங்கல், பன்னியூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 2009-2010ம் ஆண்டில் நபார்டு திட்டத்தின் மூலம் சுமார் ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு அடுக்குமாடி பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டது. இதனால் பழைய கட்டிடங்கள் பராமரிப்பு இன்றி உள்ளது.
மேலும், பழைய கட்டிடத்தின் முகப்பு வாயிலில் முள்புதர்கள் மண்டி கிடக்கிறது. இதன் காரணமாக பள்ளியின் அருகே வசிப்போர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கொட்டும் கிடங்காகவும், மாடுகள் கட்டும் தொழுவமாகவும் மாற்றி வருகின்றனர். அதேபோல் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் மாறியுள்ளது. எனவே அரசு அதிகாரிகள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்தில் மண்டிக்கிடக்கும் முட்புதர்களை அகற்றவும், சேதமடைந்து வரும் கட்டிடங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.