சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக சென்னையில் நேற்று பேரணி நடத்திய 10 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் ஆகிய 2 பிரிவுகளில் பரங்கிமலை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
சென்னை, ஆலந்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நடந்த பேரணிக்கு தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாநில தலைவர் சம்ஸ்சுல்லஹா தலைமை தாங்கினார்.
இந்த பேரணிக்கு சுமார் 10,000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர். இந்த பேரணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கருத்துகள் அடங்கிய பேனர்களை ஏந்தியபடி பேரணியில் பலர் ஈடுபட்டனர், மேலும் மூவர்ண கொடியை தாங்கியபடி சுமார் 3000 இளைஞர்களும் பேரணி சென்றனர். இந்த பேரணியின்போது கூடுதல் ஆணையர் தலைமையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அசம்பாவிதங்களை தடுப்பதற்காக கலவர தடுப்பு வாகனமும், தண்ணீர் பீச்சி அடிக்கும் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் இதில் ம.ஜ.க பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த பேரணியில் பங்கேற்ற 10000 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.