ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே பட்டப்பகலில் குடிபோதையில் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு டூவீலரில் கடத்த முயன்ற இளைஞர்களை, பொதுமக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில், நேற்று மதியம் 9 வயது பள்ளி மாணவி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் பின் தொடர்ந்த 2 இளைஞர்கள், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிறுமியை டூவீலரில் கடத்த முயன்றனர். அப்போது சிறுமி கூச்சலிடவே, இருவரும் அங்கிருந்து தப்ப முயன்றனர். இதைப்பார்த்த பொதுமக்கள் இருவரையும் விரட்டி பிடித்தனர். பின்னர் அங்குள்ள மாரியம்மன் கோயில் தூணில் இருவரையும் கட்டி வைத்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பொதுமக்கள் விசாரித்ததில் இருவரும் ராஜபாளையம் அருகே நக்கனேரி கிராமத்தை சேர்ந்த இசக்கிராஜ் (26), மற்றும் 17 வயது சிறுவன் என தெரிந்தது.
இதில் சிறுவன் மது போதையில் பொதுமக்களிடம் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இருவரையும் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர். பின்னர் சேத்தூர் ஊரக போலீசாருக்கு தகவல் அளித்து இருவரையும் ஒப்படைத்தனர்.பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவத்தால் கிருஷ்ணாபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.