புதுடெல்லி: டெல்லியில் உள்ள இந்திய- திபெத் எல்லை காவல்படை தலைமை அலுவலகத்துக்கு அமித்ஷா நேற்று சென்றார். அவருடன் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், உள்துறை செயலர் அஜய் பாலா ஆகியோர் சென்றனர். 4 மணி நேரம் அங்கிருந்த அமித்ஷா, எல்லைக் காவல்படையின் சீன எல்லையோர பாதுகாப்பு நடவடிக்கைக்கான தயாரிப்புகளை ஆய்வு செய்தார்.
இது குறித்து இந்திய -திபெத் எல்லைக் காவல்படை வட்டாரங்கள் தெரிவிக்கையில், `சீன எல்லை உடனான 3,488 கிமீ தொலைவுக்கான எல்லைப் பாதுகாப்பு பற்றி அமித்ஷாவிடம் படையின் டிஜி தீஸ்வால் விளக்கி கூறினார். அப்போது மிக குறைந்த வெப்பநிலை நிலவும் இமாலயப் பகுதி, எல்லை பாதுகாப்பில் ஈடுபடும் வீரர்கள் நவீன எலக்ட்ரானிக் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்படி அமித்ஷா கேட்டுக் கொண்டார். சமீபத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மலையேறும் உபகரணங்கள், பனியில் செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார்,’ என்று தெரிவித்தன.