அவுரங்காபாத்: குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தால் முஸ்லிம்கள் மட்டுமின்றி 40 சதவீதம் இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு எதிராக அவுரங்காபாத்தில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பிரகாஷ் அம்பேத்கர் பேசியதாவது: சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவற்றால் முஸ்லிம்கள் மட்டுமின்றி 40 சதவீதம் இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள். மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு நாடு முழுவதும் தடுப்பு முகாம்களை கட்டி வருகிறது. நவி மும்பை நெருலில் உள்ள தடுப்பு முகாமில் 1.5 லட்சம் பேரை அடைக்க முடியும். கார்கரில் உள்ள தடுப்பு முகாமில் 5 லட்சம் பேரை அடைக்க முடியும்.
என்ஆர்சி.யை அமல்படுத்த மாட்டோம் என்று அரசு கூறுகிறது. அப்படியானால் இதுபோன்ற முகாம்களுக்கு எங்கிருந்து தேவை வந்தது? இவ்வாறு பிரகாஷ் அம்பேத்கர் பேசினார். தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ ஜிதேந்திர ஆவாத் இந்த பேரணியில் பேசும்போது, “என்ஆர்சி மற்றும் சிஏஏ.வை எதிர்த்து முஸ்லிம்கள் மட்டுமே போராடுவதாக அரசு கூறுகிறது. ஆனால் பிற வகுப்பினை சேர்ந்த ஏராளமா னவர்களும் இதில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சர்வாதிகாரி ஹிட்லர், பிரதமர் மோடி வடிவில் மறுபிறவி எடுத்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கையால் மோடி அரசு தனக்குத்தானே ‘சவக்குழி’ தோண்டிக் கொண்டிருக்கிறது’’ என்றார். ராஷ்டிரிய ஜனதா தளம் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜாவும் இந்த பேரணியில் பேசினார்.