சென்னை, டிச. 29:பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (ஆயுள் காப்பீட்டு பாலிசி), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (தனிநபர் விபத்து காப்பீட்டு பாலிசி) ஆகிய இரண்டு திட்டங்களையும் கடந்த 2015ம் ஆண்டு மே 9ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில் இந்த திட்டத்தில் கடந்த 8 மாதத்தில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 493 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் காப்பீட்டுதாரர்களாக சேரலாம். காப்பீட்டு காலம் ஒவ்வொரு ஆண்டுக்கும் பிரீமியம் தொகை 330 செலுத்த
வேண்டும். இதேப்போல் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் படி காப்பீட்டுதாரருக்கு விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் முழு காப்பீட்டு தொகை 2 லட்சம் வழங்கப்படும். விபத்தில் மரணம் ஏற்பட்டால் அவரின் வாரிசுதாரர்களுக்கு இத்தொகை சென்றடையும். விபத்தில் காயம் ஏற்பட்டால் 1 லட்சம் வழங்கப்படும். இதற்கான வயது வரம்பு 18 முதல் 70 வயது வரை ஆகும். ஆண்டு பிரிமியமாக 12 செலுத்தினால் போதும். அதன்படி சென்னையில் கடந்த 1.04.2019 முதல் 30.11.2019 வரை பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் மொத்தமாக 4,09,082 கணக்குகள் சென்னை மண்டலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த 8 மாதத்தில் மட்டும் 49,08,984 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.