×

ஈழத்தமிழர்களையும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக போராடுபவர்களை கொச்சைப்படுத்துவதா?: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: ஈழத்தமிழர்களையும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராகப் போராடும் சிறுபான்மையின மக்கள்  உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் உணர்வுகளையும் சிறுமைப்படுத்தி, கொச்சைப்படுத்துவதா என்று முதல்வருக்கு, மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கின்றன என்று முதல்வர் பிதற்றி, ஈழத்தமிழர்களையும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராகப் போராடும் சிறுபான்மையின மக்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் உணர்வுகளையும் சிறுமைப்படுத்தி, கொச்சைப்படுத்தியுள்ளார். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்க முடியாத-சொந்த நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற முடியாத பழனிசாமி செல்வாக்கு பற்றியெல்லாம் பேசுவது 2019 ஆண்டின் மிகப்பெரிய ஜோக். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோதும், மாநிலத்தில் திமுக அரசு இருந்த போதும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்.பி.ஆர்) கொண்டு  வரப்பட்டது என்று முதல்வர் பேட்டியளித்திருக்கிறார். அப்போது கொண்டு வரப்பட்ட என்.பி.ஆருக்கும், இப்போது பாஜ அரசு கொண்டு வரும் என்.பி.ஆருக்கும் வித்தியாசம் சிறிதும் தெரியாத-அவரது அறியாமை இதில் வெளிப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கீழ் கொண்டு வரப்பட்ட தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கும் பணி “Resident” என்பதை அடிப்படையாகக் கொண்டது; குடியிருப்புகளை அடிப்படையாக வைத்துக் கணக்கெடுப்பது. அதற்கே எதிர்ப்பு வந்ததும்,  அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் பாஜ கொண்டு வந்திருக்கும் என்.பி.ஆர் என்பது தேசிய குடியுரிமைப் பதிவேடு தயாரிக்க வேண்டும் என்ற ஒரே உள் நோக்கத்துடன், மத ரீதியாகப் பிளவு உண்டாக்கிடக் கொண்டு வரப்பட்டுள்ளது.  பாஜவின் சார்பில் உள்துறை இணை அமைச்சராக இருந்த கிரன் ரிச்சுவும், தற்போது உள்துறை அமைச்சராகவே இருக்கும் அமித்ஷா ஆகியோரும் நாடாளுமன்றத்திலும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் தேசிய மக்கள் பதிவேடு தயாரிப்பது தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை உருவாக்கவே என்று தெளிவாக பல்வேறு காலக்கட்டங்களில் தெரிவித்து விட்டார்கள். அதன் பிறகும் முதலமைச்சர் மட்டும் ஏதோ தேசியக் குடியுரிமைப் பதிவேட்டிற்கும், இந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் சம்பந்தமில்லை என்று கூறுவது அவரது பொய்ப் பிரசாரத்தின் புதிய பரிணாமம். ஈழத் தமிழர், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவருக்கும் துரோகம் இழைத்து விட்டு கபட நாடகமாடவும் கூடாது; பதவியில் இருக்கிறோம்  என்பதாலேயே மக்களிடம் செல்வாக்குப் பெற்று விட்டதாகக்  கற்பனைக் கோட்டையை பழனிசாமி தனக்குத் தானே கட்டிக் கொள்ளவும் கூடாது.

பணத்தை வாரியிறைத்துப் பெற்ற இடைத் தேர்தல் வெற்றியின் மயக்கத்தில்,  செல்வாக்கு இருப்பதாக பழனிசாமி நினைத்தால்-முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இப்போதே சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாரா. முதல்வர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டு, மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்று முதல்வரானால் தான், மக்கள் அவர் சொல்வதை நம்புவார்கள். கூவத்தூர் முதலமைச்சர் சொல்வதையெல்லாம் நம்புவதற்கு, தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பழனிசாமி உணர்ந்து பேசுவதும், செயல்படுவதும் அவருக்கு நல்லது.

பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?
மு.க.ஸ்டாலின், தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் உரை கேட்க மாணவர்கள் மாட்டுப் பொங்கலன்று பள்ளிக்கு வருமாறு உத்தரவிடவில்லை என, கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு, முதல்வரும், அமைச்சரும் தெரிவித்துள்ளனர். அப்படி எனில், மாணவர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரையாக கூட இன்றி, ஏன் செயல்முறை ஆணையாக வெளியிட வேண்டும்?. முதல்வரும், அமைச்சரும் தரும் பதிலைப் பார்த்தால் பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற சந்தேகமே எழுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் வெறும் மறுப்பையும், மழுப்பலையும் விட்டுவிட்டு முறையான அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும்.

Tags : Eelam Tamils ,CM ,Stalin , Criticism of Eelam Tamils, National Population Registry, CM, Stalin
× RELATED கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை...