சென்னை: இந்திய ராணுவத் தலைமை தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை: இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத், டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அரசியல் ரீதியான கருத்துக்களை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அந்நிகழ்ச்சியில் `மக்களை வழிநடத்துபவரே தலைவர். நீங்கள் முன்னோக்கி நடந்தால் மக்களும் உங்களைப் பின்தொடர்வார்கள்.
ஆனால், அப்படி வழிநடத்தும் தலைவர்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும். மக்களைத் தவறாக வழிநடத்துபவர்கள் சிறந்த தலைவர்களாக இருக்கவே முடியாது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களைத் தவறாக வழிநடத்தியதால் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துகிறார்கள். இது நல்ல தலைமை அல்ல’ எனப் பேசியுள்ளார். இந்தியாவில் இதுவரையில் இப்படி எந்த ராணுவத் தளபதிகளும் அரசியல் பேசியதில்லை. தற்போது ராணுவத் தளபதி பிபின் ராவத் வெளிப்படையாக அரசியல் பேசியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது. எனவே அவர் மீது அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.