×

இந்தியாவில் ஆதார் கார்டு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 125 கோடியாக உயர்வு: மக்கள் தொகையில் 93% என யூ.ஐ.டி.ஏ.ஐ தகவல்!

புதுடெல்லி: இந்தியாவில் ஆதார் கார்டு வைத்துள்ளவர்களின் 125 கோடியாக உயர்ந்துள்ளதாக, யூ.ஐ.டி.ஏ.ஐ தகவல் தெரிவித்துள்ளது. மோடி அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, வங்கிக் கணக்கு, பான் கார்டு, பி.எஃப் உள்ளிட்ட சேவைகளுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. ஆதார் கார்டு இல்லாமல் இந்தியாவில் எதுவுமே கிடைக்காது என்ற சூழல் உருவாகியுள்ளது. தனிநபர் அடையாள அட்டை என்பதையும் தாண்டி, கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு ஆவணமாகவே ஆதார் கார்டுகள் மாறிவிட்டன.

இந்த நிலையில், இந்தியாவில் தற்போது 125 கோடி பேரிடம் ஆதார் கார்டுகள் இருப்பதாக ஆதார் அட்டை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(யூ.ஐ.டி.ஏ.ஐ) தகவல் தெரிவித்துள்ளது. அதாவது இந்திய மக்கள் தொகையில் 90 சதவீதத்தினர் 2018ம் ஆண்டில் ஆதார் கார்டுகள் பெற்றிருந்த நிலையில், அந்த அளவு தற்போது 93 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல, மொத்தம் 331 முறை ஆதார் கார்டுகள் வாடிக்கையாளர்களால் அப்டேட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்படி, நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 லட்சம் ஆதார் அப்டேட் செய்யப்படுவதாகத் தெரிகிறது. ஆதார் கார்டுகளை மக்கள் எளிதாக அப்டேட் செய்யவும் அதில் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஆதார் சேவை மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது 114 ஆதார் சேவை மையங்கள் இயங்கி வருக்கின்றன. இந்த மையங்கள் நாள் ஒன்றுக்கு 1,000 சேவைக் கோரிக்கைகளைக் கையாளும் திறனுடையவை என்று ஆதார் அமைப்பு கூறியுள்ளது. இவை தவிர வங்கிகள் தரப்பிலிருந்து சுமார் 35,000 ஆதார் மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மொபைல் போன்கள் மூலமாகவே ஆதார் சேவைகளை மக்கள் பெறும் வகையில் எம்-ஆதார் என்ற மொபைல் செயலி தொடங்கப்பட்டது. இதில் 35க்கும் மேற்பட்ட சேவைகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன. இதன் மூலமாகவே விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அடையாள ஆவண சரிபார்ப்பு செய்ய முடியும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags : India ,Aadhaar ,Indians , India, Aadhaar Card, card holders, UIDAI
× RELATED பஸ்சில் இலவசமாக பயணித்த வாக்காளர்கள்