சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்தகடுகள் மூலம் 5.5 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மின்சார பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் நிலையங்களில் சோலார் மின் உற்பத்தி தகடுகளை அமைத்து வருகிறது. அதன்படி, மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பணிமனைகளில் சோலார் தகடுகளை பயன்படுத்தி 5.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சமீபத்தில் 1.2 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் சூரிய மின்சக்தி தகடுகள் கோயம்பேடு பணிமனையில் தொடங்கப்பட்டது.
இதேபோல், அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 260 கிலோ வாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் மற்றும் மண்ணடி மெட்ரோ ரயில் நிலையத்தில் 20 கிலோ வாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் இதுவரை மொத்தம் 5.5 மெகாவாட் திறன்கொண்ட சூரியசக்தி மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதை 2020ம் ஆண்டில் அதிகரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2020ம் ஆண்டில் 8 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் 1,16,80,000 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம், ஆண்டிற்கு ரூ.2.54 கோடி சேமிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெளிவரும் கரியமில வாயு அளவு ஆண்டிற்கு 11,587 டன் ஆகக்குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.